Showing posts with label பிறனில்விழையாமை. Show all posts
Showing posts with label பிறனில்விழையாமை. Show all posts

Saturday, March 14, 2009

அதிகாரம் 15 - பாடல்கள் 6 முதல் 10 வரை

6. பிறன்மனை நாடிச் செல்லுபவன்
பின்னர் அடைவான் பின்உள்ள
அறநெறி நீங்கிய பழி, பாவம்
அச்சம் பகையெனும் இவைநாங்கும்

7. அறமொடு பொருந்திய இல்வாழ்வை
அருமை யாக வாழுபவன்
பிறனுடை மனைவி தன்னுடைய
பெண்மை தன்னை விரும்பானே

8. பிறன்மனை தன்னை விரும்பாத
பெரிய ஆண்மை சான்றோர்க்கு
அறனெனும் உயர்நெறி தன்னோடு
ஆன்ற ஒழுக்கம் தனைநல்கும்

9. நன்மைக் குரியவர் யாரென்று
நாடின் கடல்நீர் சூழ்உலகில்
புன்மைக் குணமாம் பிறன்மனைதோள்
போயே தழுவா மேலோரே

10. அறத்தை எண்ணிப் பாராமல்
அல்ல செய்த போதினிலும்
பிறன்மனை தன்னின் ஈர்க்கின்ற
பெண்மை விரும்பாச் செயல்நன்றாம்

Friday, March 13, 2009

அதிகாரம் 15 - பாடல்கள் 1 முதல் 5 வரை

1. அறத்தொடு பொருளை ஆய்ந்திட்ட
ஆன்றோர் வாழ்வில் ஒருபோதும்
பிறன்மனை தன்னை விரும்புகிற
பேதமை காணல் இயலாது

2. அறத்தின் வழுவி நின்றானை
அறிவிலி என்பார் உலகோர்கள்
பிறன்மனை விரும்பும் ஒருவனையோ
பேதையுள் பேதை என்பார்கள்

3. சிறந்த நண்பன் மனைவியினைச்
சிந்தை தன்னில் கொண்டவனை
இறந்தோன் என்றே உலகுரைக்கும்
இவனின் பேதையர் எவருமிலர்

4. தினையின் அளவும் ஆயாமல்
செல்வான் பிறன்மனை என்றால்பின்
பனையின் அளவு நலமெல்லாம்
படைத்தே இருந்தும் பயனில்லை

5. எளிது என்று இன்னொருவன்
இல்லாள் தன்னை நாடுபவன்
அழியாப் பழியை என்றென்றும்
அடைவான் என்பது நிச்சயமே