Showing posts with label Rape Of The Lock. Show all posts
Showing posts with label Rape Of The Lock. Show all posts

Friday, October 12, 2012

பெலிண்டா காவியம் - பாகம் 7 (நிறைவுப் பகுதி)


புளூம் வாதிடல்

102. வாதத்தைத் தொடங்கும் முன்னர்
            வனப்பான பொடியின் பெட்டி
தீதற்ற வண்ணம் அங்கே
            திறந்திட்டார் வாதம் தொட்டார்
காதுள்ள பேர்கள் கேளீர்
            கடவுளுக் கடுக்கா தய்யோ
மாதிவள் கூந்தல் ஈவீர்
            மங்கையின் துயரம் தீர்ப்பீர்

103. இவ்விதம் வாதம் செய்த
            எழிலுறு புளூம்பின் தன்னின்
செவ்விய பொடியின் பெட்டி
            செம்மையாய் மூடி வைத்தார்
பவ்விய மாக வாதம்
            தொடங்கவும், முடிப்ப தற்கும்
எவ்விதம் பொடியின் தேவை
            இருந்தது இதுவோர் விந்தை!

பெலிண்டா சபதம்

104. பேணிநான் வளர்த்த கூந்தல்
            பின்னமாய்ப் போன இந்நாள்
பேணுவார் அற்ற நாளாய்ப்
            போகட்டும் எந்த நாளும்
காணுவோர் அற்ற தீவில்
            கடியதோர் பாலை தன்னில்
மாணெழி லோடு பூத்து
            மலர்கின்ற ரோஜா ஆவேன்.

பெலிண்டா கண்டதீய சகுனங்களாகக் கூறியவை

105. ஊசிநூல் வைக்கும் பெட்டி
            ஒருமூன்று தடவை வீழ
நேசிக்கும் கிளியும், நாயும்
            நெறியின்றி நடக்கக் காற்று
வீசிடா வேளை கூட
            விளங்கிடு சீனக் கிண்ணம்
கூசுதல் போல ஆடக்
            கூறிய தேதோ ஒன்று ....

106. அப்பொழு ததனை எண்ணி
            ஆய்ந்திலன் ஆனால் அந்தோ
இப்பொழு திழந்து போனேன்
            எழில்மிகு கூந்தல் கற்றை
எப்படி அழகி னோடு
            இலங்கினேன் அந்தோ அந்தோ
இப்படிச் சிதையும் எந்தன்
            எழில்என நினைத்தேன் இல்லை

பகுதி – 5
பெலிண்டா அரங்கில் இருந்தோரிடம் பேசியது

107. ஈரமே சுமந்த கண்ணால்
            இரக்கமாய்ப் பார்க்கின் நீரே!
சாரமே போன உப்பால்
            தான்விளை பயன்தான் என்ன?
பாரமென் விதிமே லன்றிப்
            பகர்வதற் கொன்றும் இல்லை
வேரது போன பின்பு
            விளங்குமோ செடியின் வாழ்வு?

தேவதை க்ளாரிஸாவின்பேச்சு

108. ஏனிவண் அழகி னுக்கு
            இத்தனை புகழ்ச்சி மேலும்
ஏனிந்த அழகி னுக்கு
            இத்தனை மதிப்பு ஆய்வீர்
தானொரு நல்லி யல்பும்
            தகுதியும் இல்லா வேளை
வீணதே அழகு தானும்
            விளையுநற் பயனோ இல்லை.

109. சுருளான கற்றை தானும்
            சுருளற்ற கற்றை யேனும்
இருளேநேர் நிறத்தில் என்றும்
            இருந்திடல் இயலா தன்றோ?
உருவாக்கும் வண்ணம் தானும்
            உளதான வண்ணம் தானும்
ஒருநாளில் மறைந்தே போகும்
            உணர்ந்தாலே துன்பம் தீரும்.

க்ளார்ஸாவின் பேச்சு பயனற்றுப் போதல்

110. தேவதை தன்னின் பேச்சால்
            திகழொளி அரங்கம் தன்னில்
ஆவது எல்லாம் ஓர்நாள்
            அழிந்திடும் என்னும் ஞானம்
மேவிட வில்லை ஆனால்
            மீமிகை உணர்வே தோன்ற
யாவரும் கையைத் தட்டி
            ஆர்ப்பரித் தார்கள் இல்லை

அரங்கத்தில் நிகழ்ந்த ஆர்ப்பரிப்பு

111. பெலிண்டாவை நோக்கித் தீச்சொல்
            பேசினள் தோலஸ்டிரிஸ் அஃதால்
மெலிவான இரைச்சல் தோன்றி
            மெல்லவே வலுவ டைந்து
சிலவான சிறுமைச் சொல்லால்
            தீமைதான் விளையும் என்று
உலகோர்கள் அறியும் வண்ணம்
            உண்டான தொரு'போர்'; அங்கே.
பேரனுக்குச் சார்பானவள்

112. கூரான கருவி இல்லை
            கொடுங்காயம் எதுவும் இல்லை
சீரான தேவ கூட்டம்
            செய்கின்ற சிறிய போர்தான்
ஏரார்ந்த காமன் கோலால்
            இளைஞர்தம் அறிவு தன்னைச்
சீரார்ந்த நுதலார் கூந்தல்
            தன்னொடு நிறுக்க லுற்றான்.

113. பெலிண்டாதான் பேரன் மீது
            பெருங்கோபம் கொண்டு பாய்ந்தாள்
மெலிதாகப் பொடியைக் கொஞ்சம்
            மெல்லியள் தூவி னாளே
வலுவாகக் கொண்டை ஊசி
            வாகாகக் கழுத்தில் பாய்ச்ச
வலியாலே இரைந்தான் பேரன்
            வலுவாக இரைந்தாள் மங்கை.

114. திரும்பவே தருக எந்தன்
            திருமிகு கூந்தல் என்று
திரும்பவும் அவள்பு லம்ப
            திகைத்தனர் அரங்கில் உள்ளோர்
வருந்தவே செய்து பெற்ற
            பொருளெதும் வாரா தென்றும்
திருந்துநல் நிலவில் சென்று
            சேர்ந்திடும் என்றார் சில்லோர்.

115. நிலமதில் இழக்கும் எல்லாம்
            நிலாவினில் சேரும் என்றும்
தலைவனின் அறிவும் அன்னோன்
            தாங்கிய பொடியின் பெட்டி
அலகிலா உடைந்த வாக்கு
            அவற்றொடு உடைந்த நெஞ்சம்
சிலபல இதனை ஒத்த
            சேருமவ் நிலவில் என்றார்
பெலிண்டா வானுலகு செல்லல் 

116. திடுமென ஈரக் காற்றில்
            சென்றது ஒற்றை விண்மீன்
கடிதினில் அதனின் பின்னே
            சென்றதோர் முடியின் கற்றை
முடிவிலா வானம் தன்னில்
            முனைப்புடன் தேடிப் பார்ப்பின்
வடிவழ குடைய விண்மீன்;
            நடுவினில் வனிதை காண்பீர்.

117. கவினுற வளர்த்த கூந்தல்
            கற்றையை இழந்த தாலே
செவிகிழி படவே கூவிச்
            சினத்துடன் சீறிப் பாய்ந்து
புவியுளோர் எள்ளும் வண்ணம்
            'போர்'புரிந் ததனின் பின்னே
குவிந்துவிண் மீனாய் ஆனாள்
            கோமகள் என்றார் போப்பும்.

காப்பிய நோக்கம்

118. அற்பமாம் ஒருத்தி கூட
            அடைந்தனள் வானை என்றால்
பற்பல நலங்கள் கொண்டோர்
            பாருளார் ஏத்த வாழ்வர்
நற்பொருள் இதனை இங்கே
            நம்முளம் புகுத்த வேண்டி
விற்பனக் கவிஞர் போப்பு
            விளம்பி னார்இச் சரிதம் .

119. தன்னுடைக் காலம் தன்னில்
            தன்நாட்டின் கேட்டைக் கண்டு
தன்னுளம் நொந்த போப்பு
            தன்நாட்டைத் திருத்த எண்ணித்
தன்கவித் திறனைக் கொண்டு
            சமைத்தநல் நூலால் நாடு
நன்னிலை அடையும் வாய்ப்பை
            நச்சினார் என்ப தோர்க.

நிறைவு

120. காப்பியச் சுவையுடன் தம்முடைய
            காலத்தில் நிலவிய இழிநிலையைப்
பாப்புனை திறனால் நன்றாகப்
            பாடிய கவிஞர் அலெக்ஸாண்டர்
போப்பவர் இலக்கியம் மொழிபெயர்த்தேன்
            புலமைக் குறைவால் பிழைஇருப்பின்
கூப்பிய கரங்கள் தம்மோடு
            கூறினன் எந்தன் பிழைபொறுப்பீர் .

Sunday, October 7, 2012

பெலிண்டா காவியம் - பாகம் 6

பேரன் சூதாட்டதிதில் வெல்லல்

76. வலியநல் விதியால் பேரன்
       வந்தனன் களத்தி னுள்ளே
மெலியவள் பெலிண்டா கொஞ்சம்
       மெதுவாகச் சரிய லுற்றாள்
பொலிவுடைப் பொருள்கள் தம்மைப்
       பெற்றனன் பேரன் தானும்
பொலிவுடை பெலிண்டா தன்னின்
       பேரெழில் முகந்தான் வெளிற....

77. நடுக்குறத் தொடங்கி விட்ட
       நங்கைதான் மேலும் மேலும்
திடுக்குறும் வகையில் பேரன்
       திறமையாய் ஆட லுற்றான்
மிடுக்குடை அவனின் வெற்றி
       மிகைப்படு ஆர்ப்ப ரிப்பை
அடுக்கடுக் காக அந்த
       அவையினில் உண்டாக் கிற்றே

காஃபி இடைவேளையில் பேரன் பெலிண்டாவின் கூந்தல் கற்றையைக் கத்தரிக்க முனைதல்

78. அரசியல் வாதி தம்மை
       அறிவுடை யோராய்ச் செய்யும்
உரம்மிக்க காஃபி அங்கே
       உள்ளவர் பருகி நின்றார்
அரைக்கண்ணை மூடிக் கொண்டு
       அசைவுதன்னைப் பார்த்த பேரன்
நுரைக்காஃபி தன்னின் ஆவி
       நுழைந்திட வேக முற்றான்.

79. ஒளிதரும் பெலிண்டா கூந்தல்
       ஒப்பிலாக் கூந்தல் கற்றை
களிதர அதனைத் தானே
       கவர்ந்திடப் பேரன் எண்ண
நளியிருள் அனைய கூந்தல்
       நறுக்கிட அவனின் தோழி
பளபள பேழை விட்டுக்
       கத்தரிக் கோலெ டுத்தாள்

80. முன்நின்று பகைவர் தாக்க
       முனைப்புடன் செல்வான் வீரன்
பின்நின்று பெலிண்டா கூந்தல்
       பிரித்திடச் சென்றான் பேரன்
மின்னிழை தலையைத் தாழ்த்தி
       மெல்திரை நதியைக் காண
என்னவோர் கொடுமை! பேரன்
       ஏந்திழை அறியா வண்ணம்.

தேவ கூட்டத்தன் முயற்சி

81. பொன்நிகர் கூந்தல் கற்றை
       போக்கிட எண்ணி நின்றான்
சின்னநல் தேவ கூட்டம்
       சின்னதம் சிறகால் கூந்தல்
தன்னினை அசைத்தும் நங்கை
       தன்னுடைக் காதில் உள்ள
மின்னணி தனையும் மூன்று
       முறையசைத் தவளை ஈர்க்க.....

82. மும்முறை தனிலும் பெலிண்டா
       மெதுவாகத் திரும்பிப் பார்க்கப்
பின்னிருந்த பேரன் சற்றுப்
       பின்னடைத் திருந்து கொண்டான்
அன்னம்போல் பெலிண்டா நெஞ்சம்
       அலைவுறல் தன்னைக் கண்ட
சின்னஏரி யல்தான் மங்கை
       சிந்தையை ஈர்க்கப் பார்க்க....

ஏரியல் செயலற்றுப்போதலும் பெலிண்டாவின் கூந்தல் கத்தரிக்கப்படலும்

83. அந்தவோர் வேளை தன்னில்
       அதிசய மாகத் தன்னின்
விந்தையாம் ஆற்றல் தன்னை
       விலகிய துணர்ந்து நொந்து
என்னநான் செய்வேன் என்று
       ஏரியல் திகைத்து நிற்க
மின்னலின் வேகத் தோடு
       பேரனின் கருவி கூந்தல்....

84. தன்னினைச் சிதைக்க மூடத்
       தொடங்கிட அந்தப் போதும்
பெண்ணவள் பெலிண்டா கூந்தல்
       பேணிட உயிரை ஈயும்
சின்னதோர் தேவ கூட்டம்
       vதியாகத் தால்பாது காக்கும்
எண்ணத்தில் இடையில் சென்று
       இரண்டாகிச் செத்துப் பின்னர்....

85. முன்னிலை அடைந்த தந்த
       மொய்ம்பதற் குள்ள தாலே
சின்னவோர் எண்ணங் கொண்டோன்
       செயல்பட மங்கை கூந்தல்
பின்னமாய்ப் போயிற் றந்தோ
       பெலிண்டாவின் கண்கள் தம்மில்
மின்னல்போல் கோபம் தோன்ற
       மீதெழு கூச்சல் இட்டாள்

பெலிண்டாவின் துன்பம்

86. விண்ணதும் அதிர்ந்த தம்மா
       விரிந்தஅவ் வோசை தானும்
தன்னுடைக் கணவன் மற்றும்
       தன்செல்ல நாயி ழந்தோர்
தன்னுடைச் சீனக் கிண்ணம்
       சிதைந்திட அழுவோர் தம்மின்
கண்ணின்நீர் தன்னி னோடு
       vகதறுதல் தன்னை ஒக்கும்

87. படுக்கையில் இருந்து வீழ்ந்த
       தலையணை யாலும் எண்ணில்
மிடுக்கிற எரியும் மெழுகு
       வர்த்திதான் அணைந்த தாலும்
நடுக்குற்று ட்ராய் நகரம்
       நலிவுற்று அழிந்த தாலும்
விடுக்கின்ற கண்ணீர் ஒக்கும்
       பெலிண்டாவின் கண்ணீர் அந்தோ

பகுதி 4

ஏரியலும் பிற தேவ கூட்டமும் அகலுதல்.

88. வெட்டிய கூந்தல் கற்றை
       விளங்கிழை பெலிண்டா தன்னைக்
கொட்டிட வைத்த கண்ணீர்
       குருஞ்சிறு தேவ கூட்டம்
கட்டிழந் தோடச் செய்யக்
       கண்ணீரி னோடு சென்றான்
கட்டளை தம்மைத் தந்த
       காவலன் ஏரி யலுமே.

அம்பிரியேல் வருகை

89. அவனியின் மையம் உள்ள
       அருங்குகை தன்னை விட்டுப்
பவனியாய்க் காற்று வீசாப்
       பாழிடம் தன்னை விட்டு
அவலத்தின் தேவன் ஆன
       அம்பிரி யேலே வந்தான்
இவணுள நிலைமை காண
       எண்ணியே வந்தான் அம்மா

பெலிண்டாவின் துயரநிலை

90. ஒளியதும் சென்றி டாமல்
       ஒருதிரை இட்டு உள்ளே
களியிலாச் சோக மூச்சைக்
       கட்டிலில் விட்ட வண்ணம்
எழில்மிகு பெலிண்டா துன்பம்
       ஏந்தியே கிடைந்தாள் பக்கம்
கழிபெரும் சோகம் கொண்ட
       காரிகை இருந்தார் மாதோ!

91. அவளது படுக்கை தன்னின்
       அருகிரு மடந்தை நின்றார்
கவலுறு தோற்றம் மற்றும்
       கவின்முகம் வேறு பட்டோர்
நவிலறும் கெட்ட பண்பு
       நலிந்தவோர் கிழவி போல
குவிந்தஓர் உடலைக் கொண்டு
       கூடவே நின்றாள் அங்கே

92. மெல்லவே மெல்லப் பேசி
       மேனிதான் நோயால் வாடி
உள்ளதே போல ஆடை
       உடுத்தியே நின்றாள் அங்கே
நள்ளிருள் இரவு ஆடை
       ஒவ்வொன்றும் ஒருநோய் காட்டும்
தௌளிய ஆவி ஒன்று
       திகழ்தரும் அரணின் மீது

அங்கிருந்த சில அதிசயங்கள்

93. உயிருள்ள தேநீர்ப் பானை
       உள்ளதோர் நிறுத்தி மற்றும்
உயிருடன் உலவு கின்ற
       உயரிய பரங்கிக் காயும்
உயிர்க்கின்ற ஜாடி யோடு
       உரக்கவே பேசும் வாத்து
உயிருள பெண்ணாம் பாட்டில்
       உரக்கவே மூடி கேட்கும்

மன்மதன் இரு பைகளுடன் வருதல்

94. பேரனின் வழிபா டதனைப்
       பெரிதாக விழையாக் காமன்
பாரமாய் விந்தைப் பைகள்
       தன்னிரு கையில் கொண்டு
வீரனாம் யுலிசிஸ் காற்றை
       விசையுடன் நிறுத்தல் ஒத்து
ஆரமாம் பையில் பெண்ணின்
       ஆழ்ந்தநல் ஈர மூச்சும்.....


95. பெண்களின் நெடுமூச் சோடு
       பேசரும் உணர்ச்சி கொண்டு
புண்படப் பேசும் நாக்கு
       புலம்பிடும் சோகம் மற்றும்
கண்களின் நீரும் எல்லாம்
       கலவையாய்க் கொண்ட பையை
மன்மதத் தேவன் ஏந்தி
       மயலுடன் கொண்டு சேர்த்தான்

பேரனின் ஏமாற்றம்

96. பெலிண்டாவின் கூந்தல் கற்றை
       இருந்திட்ட பையைப் பேரன்
மேலிதாகத் திறந்தான் ஆனால்
       மேன்மையாம் அந்தக் கற்றை
இலதாகத் திகைத்தான் பேரன்
       எல்லோரின் நிலையும் அஃதே
வலிதாகக் கவரும் ஏதும்
       வாய்க்காது என்றும் யார்க்கும்

பெலிண்டாவின் புலம்பல்

97. பக்கத்தில் இருந்த தோழி
       பரிவுடன் தன்னைப் பார்க்கத்
துக்கத்தில் இருந்த மங்கை
       முடிதுடித் தலறி நின்றாள்
திக்கெல்லாம் அவளின் கூச்சல்
       சென்றெதிர் ஒலித்த வேளை
மிக்கவோர் துயரம் தன்னால்
       மேன்மேலும் கேள்வி கேட்டாள்

98. இதற்காகத் தானா நீயும்
       இத்தனை கவனம் கொண்டாய்?
இதற்காகத் தானா கொண்டை
       ஊசியால் பிணைத்தாய் அந்தோ!
இதற்காகத் தானா அஃதில்
       வுhசனைப் பொருள்கள் சேர்த்தாய்
இதற்காகத் தானா சீப்பால்
       இழைத்திழைத் திழைத்தல் செய்தாய்?

99. இளைஞர்கள் பொறாமை கொண்டும்
       இளம்பெண்கள் உற்றுப் பார்த்தும்
கிளர்ந்தபல் நலங்கள் கொண்ட
       கிளர்எழில் கூந்தல் கற்றை
வளர்ந்தெழு அதனை வெட்ட
       வாட்டமே உற்றேன் உற்றேன்
தளர்ந்தவென் உள்ளத் தோடு
       தளர்ந்ததென் உடலும் ஐயோ!

பெலிண்டாவின் முறையீடு

100. மாண்புடை புளூமே இந்த
       மன்றிலே எந்தன் உள்ளம்
கிண்டிடும் வண்ணம் உற்ற
       கீழ்மைக்கு முறைமை சொல்லி
ஈண்டுநான் இழந்து போன
       எழில்மிகு கூந்தல் தன்னை
மீண்டுநான் பெறுதற் கேது
       மிகவும்நீர் செய்தல் வேண்டும்.

101. புளூமவர் தோற்றம் சொல்வோம்
       பொடிப்பெட்டி கையில் வைத்து
வளமுடன் நடைதான் போட
       வைத்துள கோலி னோடு
பளபள கண்க ளோடு
       பாமரச் சிந்தை யுள்ள
தளதள முகமே கொண்ட
       தனிப்பெரும் வல்லோர் ஆவார்

Friday, September 21, 2012

பெலிண்டா காவியம் - பாகம் 5


பகுதி 3

ஹாம்டன் பகுதியில் நிகழ்ந்தன

64. மலரதை மகுட மாகச்
        சூடிடும் பச்சை வண்ண
    நலமிகு புல்வெ ளியை
        நண்ணிய மாட கூடம்
    குலமதில் தோன்றி னோரும்
        கூடிடும் வெளிநாட் டோரும்
    உலவிடும் ஹாம்டன் தன்னில்
        ஒவ்வொரு முறையும் இராணி...

65.  ஒப்பரும் அன்னே கூட்டும்
        உயர்கூட்டம் நடக்கும் சின்னாள்
    செப்பரும் தேநீர்க் கூட்டம்
        சிறப்புற நடக்கும் சின்னாள்
    ஒப்பிலாக் காளை யோடு
        ஒளிதிகழ் கன்னி வந்து
    உப்புக்கும் பயன்ப டாத
        உரையதும் நடக்கும் அங்கே

அரசியின் பெயர்

66.  யாருடை நடனம் அங்கே
        நடந்தது என்றோ? இல்லை
    யார்போன விருந்திற் காகச்
        செலவிட்டார் என்றோ? இல்லை
    பார்போற்றும் அன்னே தன்னைப்
        பற்றியோ? அன்றிப் பார்த்த
    சீரார்ந்த இந்தி யாவின்
        திரைப்படம் குறித்தோ? மேலும்...

67. அசைவுகள் பார்வை மற்றும்
        அழகிய கண்கள் பற்றி
    இசைவுடன் விளக்கம் சொல்லல்
        இவையுமே நிகழக் கூடும்
    விசிறிகள் நாசித் தூளின்
        விநியோகம் இவற்றின் ஊடே
    இசையுடன் பாடல் மிக்க
        எழுச்சியாய்ச் சிரித்தல் கண்ணைச்....

68.  சிமிட்டியே காதல் சொல்லைச்
        சிலர்பரி மாறிக் கொள்ளல்
    அமர்ந்துள நடுவர் தங்கள்
        அடிவயிற் றுள்ளே வாட்டும்
    சுமையதாம் பசியி னோடு
        தோன்றிய தீர்ப்பைத் தீட்டல்
    அமைதியோ டயல்நாட் டோர்தாம்   
        அவண்உலா வருவார் ஆனால்....

69.  உழன்றிடும் உள்ளத் தோடு
        உலவுவர் உழைக்கும் வர்க்கம்
    நிலந்தனில் இரண்டு வர்க்கம்
        நிலைப்பது இயற்கை போலும்
    வளம்தரும் வர்க்கம் வாட்டம்
        அடைதலும் அவர்உ ழைப்பால்
    வளம்பெற வாழ்வோர் நல்ல
        வாழ்வினை அடைதல் ஏனோ?


சூதாட்டம் நிகழல்

70.  அழகதன் சிகரம் ஆன
        அணியிழை பெலிண்டா தன்னால்
     கழகமார் இரண்டு வீரர்
         சீட்டாட்டக் களத்தில் மோதி
     எழில்மிகு பெலிண்டா தன்னை
         ஏற்றிட ஆட லுற்றார்
     சுழன்றன அவர்தம் கையில்
         சூதாட்டச் சீட்டுக் கட்டு.
  
71.  ஆரணங் கவள்தன் கையை
         அசைத்திட்ட வேளை தன்னில்
    ஏரியல் முதலாம் தேவ
         காவலர் களமி றங்கி
    சீர்மிகு சீட்டின் மீது
         சிறப்புற அமர்ந்து கொள்ள
    போரதாம் சூதுப் போர்தான்
        பொலிவுடன் நடந்த தங்கே
  
72.  மீசையும் தாடி கொண்ட
        மிடுக்கான அரசர் நால்வர்
    ஆசையைத் தூண்டும் நல்ல
        அரசியர் நால்வ ரோடு
    மேசையின் விரிப்பின் மீது
        மிகஎழில் வண்ணம் கொண்ட
    வேசையை போன்ற சீட்டு
        விரைவினில் இறங்கிற் றம்மா

73.  ஸ்பேடது வெல்க என்று
        பெண்ணெழில் பெலிண்டா சொல்ல
    ஸ்பேடதே வெற்றி கொள்ள
        பெருமகிழ் வுற்ற தங்கே
    ஸ்பேடிலி யோதான் வெற்றி
        பெற்றிட்டான் முதலில் அங்கு
    மானிலி யோதான் தோற்று
        மண்டியிட் டானே அந்தோ

சீட்டுக்ககளில் ஓரினச்சீட்டு

74.  தொடர்ந்துசூ தாட்டப் போரில்
        துணிவுடன் பாஸ்டோ வந்தான்
    அடர்ந்தவன் விதியி னாலே
        அமைந்தில நல்ல சீட்டு
    இடருடன் அவனின் ஆட்டம்
         இறுதியாய்ப் போன பின்பு
    சுடருடன் பாம்தான் வந்தான்
         சூதாட்டக் களத்தை நாக்கி.

75.  பாமவன் பின்னர் வந்த
        பாங்குடை ஓவும் போரில்
    தாமுளம் உடையும் வண்ணம்
        தழுவினான் தோல்வி தன்னை
    தாமரை மலரைப் போன்ற
        தகுதிசால் பெலிண்டா என்னும்
    பூமகள் வென்றாள் சூதுப்
        போரிலே பூமிப் போடு

Wednesday, September 5, 2012

பெலிண்டா காவியம் - பாகம் 4


தேவ கூட்டத்தின் பணிகளாக ஏரியல் உரைத்தவை

50.  ஏரியல் தேவ கூட்டத்
        திடையினில் தோன்றிக் கையில்
    ஏருடன் விளங்கும் செங்கோல்
        ஏந்திய வண்ணம் நின்று
    கூறத்தான் தொடங்க லுற்றான்
        கொடுப்பீர் உம்செவிகள் தம்மை
    பாரிலே நமக்கென் றுள்ள
        பற்பல கடமை கேட்பீர்

51.  எல்லையில் வானின் மீதும்
        இடையுள பரப்பின் மீதும்
    மெல்லவே வீசும் தென்றல்
        மெதுவாகப் பொழியும் தூறல்
    நல்லஅம் மழையின் யின்பு
        நலமுடன் தோன்றும் வண்ண
    வில்லதும் நம்மின் செய்கை
        விளம்புவேன் இன்னும் கேட்பீர்

52.  மண்ணுல கதனில் வாழும்
        மானிட இனத்தார் தம்மின்
    தன்னியல் பதனை நோக்கல்
        தகுந்தநல் வழியில் சேர்த்தல்
      வண்ணநல் மலர்கள் மற்றும்
        வானவில் தன்னின் வண்ணம்
      தன்னினை எடுத்து மாந்;தர்
        தலைமயிர் வண்ணம் மாற்றல்....

53.  கன்னத்தில் நாணச் செம்மை
        கவினுற மிகைக்கச் செய்தல்
    எண்ணத்தின் செம்மை தன்னை
        ஏற்றமாய்ச் செய்தல் மேலும்
    என்னதான் நிகழ்க் கூடும்
        என்பதை எடுத்துச் சொல்லல்
    இன்னபல் பணிகள் நம்மின்
        இணையிலாப் பணிகள் ஆகும்.

தேவகூட்டத்திற்கு ஏரியலின் எச்சரிக்கை

54.  இன்றுநம் தேவ கூட்டம்
        எதிரிகொளும் தீங்கொன் றுண்டு
    இன்னதென் றதனை நானும்
        இன்னமும் அறிய வில்லை
    நன்னல முடையார் யார்க்கோ
        நலிவொன்று வருதல் கூடும்
    வன்மையால் மெலியார் யார்க்கோ
        வருத்தமொன் றெய்தல் கூடும்.

55.  உன்னத ஒழுக்கம் தன்னில்
        உடைப்பது நிகழக் கூடும்
    சின்னதோர் சீனக் கிண்ணம்
        சிறுவிரி வடையக் கூடும்
    வன்னமுள் பெலிண்டா தன்னின்
        வழிப்பாட்டை மறக்கக் கூடும்
    இன்னல நடனம் ஆட
        இயலாமல் போகக் கூடும்

56. தன்னுடை இதயம் தன்னைத்
        தான்பறி கொடுத்தல் கூடும்
    மின்னுநல் கழுத்தின் பூணை
        மேடையில் தொலைக்கக் கூடும்
      தன்னுடை செல்ல நாயாம்
        ஸாக்கது தொலையக் கூடும்
    என்னதான் நிகழும் என்று
        இயம்புதல் வல்லேன் அல்லேன்.

57.  அச்சமே ஊட்டும் சூழல்
        அதுதனில் நீங்கள் எல்லாம்
    எச்சரிப் புடனே நின்று
        எதிர்வரும் கேட்டை நீக்க
    நிச்சயம் முயல வேண்டும்
        நீரதை விரைவில் செய்வீர்
    மெச்சிடும் வகையில உங்கள்
        மேன்மையாம் செய்கை வேண்டும்

ஏரியல் பணிகளைப் பகிர்ந்தளித்தல்

58.  பெலிண்டா வின்-கை விசிறி
        பேணுக ஜிஃப்பி ரட்டா
    பொலிவுடைக் கரிதன் தொங்கல்
        போற்றுக பிரில்லி யண்டே
    எழிவான கடிகா ரத்தை
        என்னுடை மொமென்டில் லாடார்
    அழகான கூந்தல் கற்றை
        அதுதனைக் கிரிஸ்பிஸா காப்பாய்
    தேவதைகளின் பெயர்கள்   

59.  பெலிண்டாவின் செல்ல நாயைப்
        பேணுவேன் நானே இன்னும்
    வலிவுடன் தேர்வு செய்யும்
        வல்லதோர் கூட்டம் கூடி
    மெலியநல் இடையில் உள்ள
        மிகஎழில் உடையைக் காப்பீர்
    புலிநிகர் ஆற்ற லோடு
        புகழுடை பெலிண்டா காப்பீர்

60.  ஏழடுக் காக உள்ள
        எழில்மிகு ஆடை தன்னில்
    வாலுடைக் கொக்கி யோடு
        வன்திமிங் கலத்தின் என்பும்
    சீலமாய் அமைந்த போதும்
        சீரிய வளையம் போலக்
    கோலமாய் நின்று காப்பீர்
        கொடிதெதும் நிகழா வண்ணம்.

ஏரியலின் அச்சுறுத்தல்

61. எந்தவோர் தேவ கூட்டம்
        இட்டதோர் பணியில் சோர்ந்தால்
    சிந்தையில் கவனம் இன்றிச்
        செயல்தமை மறந்தால் தன்பால்
    தந்தவோர் பணியைச் செய்யத்
        தவறினால் தருவேன் தண்டம்
    அந்தமில் தண்ட னைக்கு
        ஆளாக நேரும் நீரே

62. இறகடிக் கியலா வண்ணம்
        இளகிய பசையால் ஒட்டிக்
    கறங்குபோல் சுற்று கின்ற
        கருவியில் பிணைத்து மற்றும்
    கிறங்கிடச் செய்யும் வண்ணம்
        கிளர்புகை அறையில் போட்டு
    இறந்திடும் அளவுக் கிங்கே
        இன்னல்கள் செய்வேன் காணீர்

63.  இங்ஙனம் ஏரி யல்தான்
        இயம்பிடப் பாய்ம ரத்தில்
    தங்கிய தேவ கூட்டம்
        தானது இறங்கி வந்து
    தங்களுக் கிட்ட செய்கை
        தாம்செயத் தொடங்க லானார்
    பொங்கெழில் பெலிண்டா கூந்தல்
        பொலிகூந்தல் கற்றை காத்தார்