Tuesday, May 1, 2018

காவிரியும் காவேரியும்

“கல்லும் மலையும் குதித்து வந்தேன்
பெரும் காடும் செடியும் கடந்துவந்தேன்”

    இப்படிப் பாடியபடியே ஆற்றங்கரை படித்துறையின் படிகளில் குதித்து இறங்கினாள் காவேரி. ஏழு வயது நிரம்பிய காவேரிக்கு இரு அண்ணன்கள் உண்டு. ஆனால் தங்கையோ அக்காவோ கிடையாது. ஆர்வமாகப்படி இறங்கியவளை அம்மாச்சி “ஏய் பார்த்து இறங்குபுள்ள வழுக்கிறப்போகுது” என்று செல்லமாகக் கண்டித்தாள். “அம்மாச்சி இந்த காவிரி நதியைப் பார்த்து தான எனக்கு அம்மாவும் அப்பாவும் பேரு வெச்சாங்க”? என்று காவேரி கேட்டபோது அம்மாச்சி லேசாக முறுவலித்தாள்.
   
    “ஆமாண்டி செல்லம் உன் அப்பாவுக்கு பொட்டபுள்ள வேணும்ணு ரொம்ப ஆசை. உன் அண்ணங்க பொறந்தபின்னால அந்த ஆசையில இந்த காவிரி ஆத்துக்கு வந்துட்டு குளிச்சிட்டு போறப்ப “காவிரித்தாயே எனக்குப் பொண்ணு பொறக்கனும் அப்படிப் பொறந்துட்டா உன் பேரை வைக்கிறேன்னு இந்த நதிகிட்ட சொல்லிட்டு வருவாராம். அதான் உனக்கு அந்த பேரை காவேரின்னு வெச்சாரு” பாட்டி இதைச் சொன்னபோது காவேரியின் கண்கள் அகல விரிந்தன. “ஆத்துக்கு நாம பேசுறது புரியுமா அம்மாச்சி?” என கேட்டாள். ம்ம்….. புரியுமோ புரியாதோ நாம நினைக்கறத அந்த ஓடுற தண்ணி கடல்ல போய் சொல்லுமாம். அங்க இருக்கிற கடல்மாதா அலை மூலமா மேல இருக்கிற சாமிகிட்ட சொல்லுமாம். இப்படி ஒரு நம்பிக்கையிலதான் ஓடுற தண்ணியோட பேசுவாங்களாம்” அம்மாச்சி இப்படிச்சொன்னபோது காவேரி தன் கால்களைத் தொட்டு ஓடும் காவிரி ஆற்றைப்பார்த்து தனக்கு ஒரு நல்ல தோழி கிடைத்து விட்டதாக உணர்ந்தாள். “சரி சரி இனி தினமும் உன்கிட்ட என்னைப்பத்தி சொல்வேன். நீயும் என்கிட்ட அன்பாக இருக்கனும்” என்று தன்மேனியைத் தொட்ட காவிரியிடம் காவேரி சொல்லிப் பூரித்தாள்.
    தர்மபுரி மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையோர அழகான கிராமம்தான் காவேரி பிறந்த ஊர். செல்லப்பெண்ணாக தந்தையாலும் அண்ணன்கள் அம்மா அம்மாச்சி தாத்தா என்று எல்லோரின் அன்பாலும் வளைய வந்தாள். இருந்தாலும் வளைந்து நெளிந்து ஓடும் காவிரிதான் காவேரியின் இணையில்லாத் தோழியாக தன்னுள் அவள் வரித்துக்கொண்டாள்.
   
    “ஆற்றுத்தோழியே! நீ கோடையில் மெலிந்து பின் கொட்டும் மழையில் பெருத்து”…….. பத்து வயதுக் காவேரி காவிரியின் நீரை கைகளில் அள்ளி தன் வகுப்புத் தோழிபோல் எண்ணி தான் உண்டது முதல் விளையாடியது அன்னை தந்தை மடியிலாடி மகிழ்ந்தது வரை மெல்லிய குரலில் சொல்லி மகிழ்வாள்.
    காவிரி ஆறுபேசவில்லை. ஆனால் என்றாவது சில நாட்களில் காவேரி வரவில்லையென்றால் காவிரிக்கு துக்கமாக இருக்கும்.
   
    “ஏனடி வரவில்லை அழகுப் பதுமையே! உன்னைக் காணாமல் கரை ஏங்குதடி” காவிரி ஆற்றுத்தண்ணீர் இப்படிச் சொல்லி சலசலத்து ஓடுவது யாருக்கும் புரியாதுதான். ஆனால் அங்கு ஓர் தெய்வீக அன்பு மலர்ந்து மணம் வீசியது காவிரிக்கும் காவேரிக்கும் மட்டுமே புரியும். காவேரி பன்னிரண்டு வயதைத் தொட்டபோது அவள் மேனியில் ஆற்றங்கரை பூஞ்சோலையாக அழகும் வண்ணமும் மின்னின. காவிரி தன் நீரால் அவளை மேலும் பொலிவுபெறச்செய்தது. இப்போதெல்லாம் அம்மாச்சியோடு அம்மாவும் ஆற்றங்கரைக்கு வர ஆரம்பித்தாள். மகளின் எழிற்கோலம் பாதுகாக்கப்படவேண்டும் என அவள் ஆடைமாற்றும்போது நீராடும் போதும் காவலாக நிற்பாள். ஒரு புதுப்புனல் வரும் காலம் காவேரியின் உடலும் புதுப்புனல் கண்டது. அன்று முதல் காவிரிக்கு வரும் காவேரியை மிக விரைவில் நீராடி விட்டு வரச்சொல்லி படித்துறையின் படியில் அம்மா அமர்ந்து சொல்லும்போது காவிரியுடன் காவேரி அதிகம் பேச முடிவதில்லை. இப்படியும் அப்படியுமாக பள்ளிப்பருவம் கடந்தது. ஒரு விடுமுறை நாளில் காவேரி தன் தோழி காவிரியிடம் இப்படிச் சொன்னாள்.
       
    அண்ணனின் தோழனாம் அன்பரசன்….
    அவன் கண்களால் பாடம் சொன்னான்…..
    பல பாடங்கள் பள்ளியில் படித்த நான்
    அவன் சொன்ன பாடத்தால் பறி கொடுத்தேன் மனதை….
   
    காவிரி சிரித்தது. மகிழ்ந்தது. “காவேரிப்பெண்ணே! உன் கனவுகள் கனிய நான் கடல் மாதாவிடம் சொல்வேன்” என்று அவள் காதோரம் சலசலத்தது.
   
    “தமிழ் நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட இந்த கர்நாடக அரசு ஏன் இப்படி மறுக்கிறது? எத்தனை அணைகளைக் கட்டி இப்படி வர்ற தண்ணீரின் அளவைக் குறைத்தால் நாம என்ன செய்யுறது?
    அப்பாவின் நண்பர்கள் திண்ணையில் அமர்ந்து பேசியதைக் காவேரி கேட்டாள். அவள் கண்களில் வெந்நீர் புறப்பட்டது. மறுநாள் ஆற்றுக்குச் சென்ற அவள் காவிரியிடம் கண்கலங்கிப் பேசினாள்.

        அன்புத்தோழிக்கு அணைபோட்டு
        அடைத்தாரோ? உன்
        அழகுநடை பூமியில் புரளப்
        பூட்டும் போட்டாரோ?
        குடகில் பிறந்த உன்னைக்
        குடத்துத் தண்ணீராய்
        குறுக்கியும் வைத்தாரோ? குமரியே!
        உன் கூக்குரலைக் கேளாத
        செவிடரை என்னவென்பேன்?
        தோழியே! தோள்தட்டிச் சொல்லடி
        உன் சுமையை….

காவேரியின் இந்த விசும்பல் கேட்ட காவிரியும் பேசியது.
   
    “அகத்தியரின் கமண்டலத்தில் அடைபட்டேன் ஒருகாலம். புpன் காக்கையாக கணபதி வந்து கவிழ்த்து விட்டதில் பெருகி ஓடி வந்தேன் எனப் புராணங்கள் எழுதி வைத்தார்கள். இன்று கமண்டலம் என்றால் காக்கை கொட்டிவிடும் என்று அணைகளைக்கட்டி அடைத்துவைத்தாரடி” என்னை யாருக்குச் சொந்தமென நீதிமன்றம் கூற முடியவில்லை. நான் இயற்கை அன்னையின் பிள்ளைதான் என்றாலும் கடல் கணவனைச் சென்று கலந்திட எனக்கு ஏன் இத்தனை தடைகள் வழியெங்கும் தடுப்புகள் போட்டுவைக்க இவர்கள் யார்?” காவிரி புலம்பியது காவேரியின் கண்கள் இன்னுமொரு காவிரியானது.
    நாட்கள் பல சென்றன. காவிரியிடம் ஒருநாள் காவேரி பேசினாள்.
   
    “அன்பரசன் என் அரசனாக அன்னை தந்தை விரும்பவில்லை. அதனால் நானும் அவரும் ஒரு முடிவு செய்துள்ளோம். நாளை பொழுதுவிடியும்போது நான் அவருடன் யாரும் காணாமல் நெல்லைக்குப் போகிறேன். உன்னிடம் மட்டுமே இதனைச் சொல்கிறேன். அவரை நம்பி பயணப்படப்போகும் நான் உன்னைப்பிரிவதனால் மட்டுமே மனம் துடித்துப்போகிறேன். தோழியே! நாளை மறுநாள் முதல் நான் தாமிரபரணிக்கு அண்ணியாவேன். ஆம!; என் கணவரின் சகோதரி என் நாத்திதானே? என்னை வாழ்த்தியனுப்பு காவிரிக்கண்ணே!” என்று காவேரி தன் கண்ணீரை காவிரியில் கலந்தாள். காவிரி வாழ்த்தியது. :நீ நன்றாக வாழ்ந்திட என்றும் நான் கடல் காதலனிடம் வேண்டிக்கொள்வேன்” என்று கூறிய காவிரி சொன்னது சோகமாக…….
   
    “பெண்ணே மனிதக் கட்டுகளையும் கட்டுப்பாடுகளையும் உடைத்துவிட்டு நீ உன் காதலனோடு போகிறாய். ஆனால் மனிதன் கட்டிய அணைக்கட்டுகளைத் தாண்டி நான் பாய்ந்தோட முடியாமல் கழிவுகளையும் நாற்றங்களையும் சில இடங்களில் என் மேனியில் சுமந்து கொண்டும் சீர்கெட்டும் அழிந்து வருகிறேன். எனக்காக நீ உன்சாமியிடம் வேண்டிக்கொள்வாயா? பெண்ணே…..என் காவேரியே….
    காவிரியின் புலம்பல் காவேரிக்குப் புரிந்தது என்றாலும் காவிரி பல நூறு ஆண்டுகள் வாழ்வாள். ஆனால் காவேரி ஒரு நூறு வாழ்வதே கடினம். எனவே அழுத விழிகளோடு அனபரசனோடு அடுத்தநாள் விடிகாலை அவள் காதல் பயணம் மேற்கொண்டாள். காவேரியையாவது வாழ விடுவார்களா?......

No comments: