Tuesday, May 1, 2018

எப்படிச் சொன்னாலும்

    பழனிச்சாமி சோர்வாக வாசலில் வந்து அமர்ந்தார். ஐம்பத்து ஏழு வயதாகும் தான் அடுத்த வருடம் ஓய்வு பெற்றுவிடுவோம் இன்னும் மகன் சரவணனுக்கு வேலை கிடைக்கவில்லை. அவ்வப்போது தற்காலிகமாக ஓரிரு மாதங்கள் வேலைக்குச் சென்றுவிட்டு வருவான். அவ்வேலைகளில் நிரந்தரமாகக் கிடைக்கும் சூழ்நிலை இருந்தாலும் பணம் செலவழித்து யாராவது அமர்ந்துவிடுவார்கள். சரி என்ன படிப்புதான் அவன் படித்தான்?

    குழந்தை முதல் பள்ளியிலும் சரிஇ கோவில்இ ரோட்டரி சங்கங்கள் என்று எங்கு வேண்டுமானாலும் பாட்டுகள் மனப்பாடம் செய்து ஒப்புவித்து பரிசுகள் பல வாங்கியவன்தான் சரவணன்.

    திருவாசகம் திருப்புகழ் தேவாரம்……என்று போட்டிகளில் பாடிப் பரிசுபெற்ற அவன் தானும் அர்ச்சகராக வேண்டுமென எண்ணியது அவன் தந்தைக்கு வியப்பளித்தது. ‘அர்ச்சகரா? நீயா? அது…..நம்ம ஆளுக எல்லாம் ஆக முடியாது. அது அந்த….ஆளுக மட்டுந்தான் ஆக முடியும்’! இது பதினாங்கு ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

    சரவணன் வளர வளர அவன் எண்ணமும் ஆலமரமாக மனதில் வேர் விழுது என ஊன்றி அழுத்தமானது. அப்போது ஒரு சிறு ஒளி ஏற்பட்டது. அல்லும; பகலும் இறைவனின் பாடல்கள் மட்டுமல்லாது புராணங்கள் படித்து தன்னை இதற்காகவே உருவாக்கிக் கொள்ள அவன் நினைத்து 12ம் வகுப்பு முடித்தபோது அன்றைய அரசாங்கம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அறிவித்ததோடு மட்டுமின்றி அந்தப்படிப்பிலும் (அர்ச்சகராகப் படிப்பது) மற்ற சாதியினரையும் சேர்த்துக்கொள்ள கட்டாயச் சட்டத்தினைப் பிறப்பித்தது.

     பழனிச்சாமிக்கு மகனின் ஆசையை நிறைவேற்ற ஒரு வழி பிறந்தது. சரவணனோ தான் வணங்கிய தெய்வங்கள் எல்லாம் தன்னை மலர்த்தூவி வரவேற்பது போல் உணர்ந்தான். பழனிச்சாமிக்கும் தான் மின்சாரவாரியத்தில் வேலை பார்த்து வந்ததால் யாரைப் பிடித்து இடம் வாங்க முடியும் என்று பாதை தெரிந்தது. நடந்தது முடிந்து. சரவணன் படித்தான் நல்லமுறையில் தேர்ச்சியும் பெற்று சான்றிதழும் வாங்கினான். ஆனால் அதன்பின் இன்றுடன் அவன் படித்து முடித்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. பழனிச்சாமி வாசலில் அமர்ந்தவாறே ‘சரவணன் எங்கே?’ என்று தன் மனைவி ரேவதியிடம் கேட்டார்.

    ‘ஆங்…சொல்ல மறந்து விட்டேங்க’. இன்னைக்கு தம்பி ஒரு விஷயம் சொன்னான். சட்டம் போட்டாச்சாம். எந்த சாதிக்காரங்களும் அர்ச்சகராகலாம்னு’ அதப்பார்த்ததும் பக்கத்துலே ‘அந்த ஐயர்கிட்ட கேட்கப் போயிருக்கான். பழனிச்சாமிக்கு உற்சாகம் பிறந்தது’. “என்ன…..நிசமாவா?! அவரும் கிளம்பி சரவணன் போன அந்த அவர் வீட்டிற்குப் போனார். பின் சில மாதங்களில் சரவணனுக்கு வேலை கிடைத்தது.

    நாட்கள் மாதங்கள் வருடங்கள் ஒன்றிரண்டு கடந்தன.

    சரவணன் கோவில் கோவிலாக அனுப்பப்பட்டான். இவன் பிறந்து வளர்ந்த தெருவில் உள்ளோர்களும் சரி கோவிலுக்கு வரும் வேறுசிலரும் சரி சரவணனைக் கண்டால் திருநீறுகூட வாங்குவதில்லை அங்கிருக்கும் அந்த அவரிடம் மட்டும் “சாமி திருநீரு குங்குமம் கொடுங்க” என்று கேட்டபோது திகைத்துப் போனான். இவர் காதுபட சிலர் இப்படியும் பேசினார்கள்.

    “சர்க்கஸில் கோமாளியும் உண்டு….சிங்கம் புலி கூட வருகிற வீரர்களும் உண்டு” இவனைப் பார்த்தால் நம்மால அந்த இடத்திலே வச்சுப் பார்க்க முடியலே” சரவணனுக்கு மனம் நொந்து போனது.

    “அடப்பாவிகளா நான் கோமாளி என்றால் நீங்கள் எல்லாம் யார்? இறைவன் முன்னால் எல்லாரும் சமம் என்பதுதானே நியதி. சர்க்கஸ் கூடாரம் வேடிக்கை காட்டவும் காசு சம்பாதிக்கவும்தானே? கோவில் என்பது அப்படியா? நான் அவர்களைவிட எந்த விதத்தில் குறைந்தவன்? நல்ல காரியங்கள் கல்யாணம் இன்னபிற சடங்குகளும் நடத்த எனக்குத் தகுதியில்லை என்று நீங்கள் முடிவு செய்தால் நீங்கள் வணங்கும் தெய்வங்கள் எனக்குத் தகுதியில்லாதவை. உங்களுக்காக மந்திரம் சொல்லி இடைத்தரகனாக இறைவனுக்கும் உங்களுக்கும் இடையே இருப்பதைவிட என் அறிவையும் உடல் உறுதியையும் கொண்டு நான் கௌரவமாக வாழ்ந்து கொள்வேன். காசுக்காகவும் பிற சலுகைகளுக்காகவும் உங்களையே கேவலமாக எண்ணும் அவர்களைவிட நான் உயர்ந்து காட்டுவேன் என்று எண்ணியவாறு வெளியே வந்த சரவணன் தமிழ்நாடு நடத்திய சர்வீஸ்கமிஷன் பரீட்சைகள் எழுதி கிராம நிர்வாக அதிகாரியாக சில வருடங்களில் வேலையில் அமர்ந்தான்.

    “சாமி” இறப்பு சான்றிதழ் வேணுங்க” சாதிச் சான்றிதழ் போட்டுத் தரணும் ஐயா! வாரிசு சான்றிதழ் தேவைப்படுதுங்க சாமி” என்று கேட்டுவரும் இந்த அடியவர்களுக்காக பணம் ஏதுமின்றி பணி செய்யும் சரவணனின் சாதி இன்று பலருக்கும் மறந்து போனது.

    மந்திரங்களை “எப்படிச் சொன்னாலும்” மனங்கள் மாறாத வரையில் நாம் அடிமைகள் என்பதை நாம் அறிவுடன் உணர்வது எப்போது?
    ஒருநாள் தன் அலுவலகத்திற்கு தன்னுடன் பள்ளியில் பயின்ற ரஹிம் வந்திருந்தான் ஒரு சான்றிதழ் பெற சரவணன் மகிழ்ந்து வரவேற்றான். அவன் இப்போது இமாம் ஆகியிருப்பதாகச் சொன்னபோது சரவணன் மகிழ்ந்தான். அதே வேளையில் தான் கோவில் குருக்களாகி அவமானப்பட்டதெல்லாம் நினைவுக்கு வர ஜாதி என்ற போர்வையின்றி ரஹிம் இமாம் ஆனது இன்று மதிக்கப்படுவது….சரவணன் சிந்தித்தான். சட்டங்கள் வரலாம். ஆனால் சமுதாய மாற்றம் வராதபோது..?! பாதை மாறுவது நல்லதா? அல்லது நாத்திகனாகி சாதி சாக்கடையை ஒழிப்பதா? சிந்தித்தான் சரவணன். அவன் விடை காண்பான் விரைவில்……. 

No comments: